கனடாவில் சிறுமி மீது ஓநாய் தாக்கியது
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மார்க்கம் மாநகர விலங்கு நலச் சேவைப் பிரிவினர் யார்க் பிராந்திய காவல்துறையுடன் இணைந்து இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மார்க்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை கயோட்டி எனப்படும் ஓநாய் கடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காலை 8:15 மணியளவில் மிங்கே அவென்யூ மற்றும் பர் ஓக் அவென்யூ சந்திப்புப் பகுதியில் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, அச்சிறுமிக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மார்க்கம் மாநகர விலங்கு நலச் சேவைப் பிரிவினர் யார்க் பிராந்திய காவல்துறையுடன் இணைந்து இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த சில நாட்களுக்கு விலங்கு நலச் சேவைப் பிரிவினர் இப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடுதல் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மார்க்கம் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கயோட்டியைப் பார்த்ததும் பதற்றமடைந்து ஓட வேண்டாம் எனவும் சத்தம் போடுவது, கத்துவது, கைகளைத் தட்டுவது அல்லது கைகளை அசைப்பதன் மூலம் உங்களைப் பெரிய உடலமைப்பு கொண்டவராகக் காட்டிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விலங்கின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே, மெதுவாகப் பின்னோக்கி நகர வேண்டும் எனவும் எப்போதும் ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பேணுங்கள். அதற்கு உணவளிக்கவோ, அதன் அருகில் செல்லவோ அல்லது அதனுடன் விளையாடவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





